Thursday, October 29, 2009

காதல்


உனக்கு பிடித்ததாய்,
நீ உரைத்த உணவை
புத்தகத்தின் துணை கொண்டு,
அம்மாவின் வழி கொண்டு,
சமைத்து பரிமாறிய பின்,
உன் கண்நோக்குகின்றேன்
பரீட்சை முடிவுக்காய்
பரிதவிக்கும் பள்ளி சிறுமியாய்...................


மௌனத்தை இழைய விட்டு,
என் ஏக்கத்தை ஏற விட்டு,
அழகாய் உண்டு முடித்து,
கை அலம்புகையில்,
பின் தொடர்ந்த
எனை பார்த்து,
கண் சிமிட்டி
புன்னகைக்கையில்,
பிழைத்து கொள்கிறது
என் காதல்!

Saturday, October 3, 2009

காந்தி ஜெயந்தி



நாட்காட்டியும்,
நாளேடுகளும்
மறவாமல் சொன்னன.
அக்டோபர் 2
அரசாங்க விடுமுறை என்று!
காகங்களின்
எச்சங்கள்
சுத்தப்படுத்தப்படும்
கூடவே
காந்தி சிலைகளும்!
கட்சி கொடிகளின்
நிழலில்
இளைப்பாறும்
காந்தி படங்கள்!
அருவா சாமிக்கும்
அவசர விடுதலை!
கருணை மனுவின்
கைங்கர்யத்தில்!
கடற்கரையும்
காந்தி பூங்காக்களும்
"களை" கட்டும்!
எச்சமான விடுமுறையின்
மிச்சத்தை கரைக்க!
சிறப்பு திரைப்படங்கள்
வண்ணமிடும்
தொலைக்காட்சிகள்
மறந்தும் காட்டுவதில்லை
மகாத்மாவை!
தினம்
நாடி செல்லும்
கடை மூடி கிடந்ததால்,
மனம் வாடிப்போன
"குடி" மகனுக்கு
கூடுதலான விலையில்
வேண்டிய மட்டும்!
வாஞ்சையோடு
வாங்கி கொண்டே
வயிறெரிய நீட்டும்
ரூபாய் நோட்டில்
புன்னகைக்கிறார் காந்தி!

Sunday, September 20, 2009

இது நிழல் சிந்தும் கண்ணீர்!




மிகச்சரியாய்
4 மணிக்கு
கண்ணி வைத்து
அடிக்கிறது கடிகார முள்!

தூக்கத்தின் மிச்சத்தை
துச்சமென மிதித்து
உதறி எழுகின்றன கண்கள்!


பெரும்பாலும்
காலைக்கடன்கள்
காப்பி போடுவதிலும்,
கோலம் போடுவதிலுமே
மறந்து போகும்!


அழுகின்ற குழந்தையின்
ஹார்லிக்ஸ் முதல்
அறுபது வயது
மாமாவின் iyodex வரை
எல்லாம் பழக்கப்பட்ட
வழக்கங்கள் தான்!


அரைகுறை உணவு,
அலுவலக அவசரம்,
அதிகாரியின் திட்டு,
அனைத்தும் மறத்து போகும்,
மகனின் matriculation
பீஸை நினைக்கும் போது!


இடைவேளையில்,
கொஞ்சம் முத்தங்கள்,
பல அழுகைகள்,
சில ஆறுதல்கள்!


இருதயம் கூட
விட்டு விட்டு துடிக்கும்!
இந்த பெண் வாழ்வு மட்டுமே
சுடும் உலை
போலகொதிக்கும்!


இருப்பினும்,
சேவல் கூவி
விடியப்போகும்
மறுநாளுக்காக,
கண்கள்
காத்திருக்க தொடங்கும்!

இது ஒரு பிரம்பின் கனவு



மாணவதோழனே!
நீ நினைத்தால்எட்டு
திக்கும்தொட்டு விடும் தூரம்தான்!
கருத்தோடு நீ படிக்க

காமராஜர் தந்தகல்வி இது.
பருவத்தே பயிர் செய்து
பகலவனாய் எழுந்து வா!

கவனமாய் நீபடித்தால்................
கரும்பலகையும்
உன்கைஎழுத்து படக்காத்திருக்கும்!

சிப்பிக்குள் சிறைப்படும்
மழைத்துளி மணி முத்தாவது
சிப்பியின் சிரமத்தால்தான்.


நீ...........நல முத்தாவதும்
கல் உப்பாவதும்
உன் கையில்தான்!

தீபமும் தீபந்தமும் எழுவது
தீக்குச்சியின் உரசலில் தான்.
நீ....தீபமாய் ஒளிரவே
நாங்கள் தீக்குச்சிகளாகின்றோம்!


பாதத்தை கீறும்
பரல்களுக்கு பயந்து
பயணங்கள் நிற்பதில்லை.


தோல்விகளால்
துவண்ட சோதனைகள்
சாதனைகளாவதில்லை!


நீ சாதிக்கு பயந்தவனாக அல்ல.
சாதிக்க பிறந்தவனாயிறு!


இளைப்பாராத எரும்பாயிறு.
இமயமும்எட்டடிதான்!

உன் கைஎழுத்தை கண்டித்த
எங்கள் கூட்டத்தை
உன் ஒரு கைஎழுத்திர்க்காக
காத்திருக்க வையடா.


கண்ணநீர் மல்க கூறுகின்றோம்.
காத்திருக்கும் காலமும்
கனப்போழுதாகுமடா
கற்றுக்கொடுத்த கைகளுக்கு!

ஓசை இல்லாத ஓலங்கள்


கூடு கட்ட மைனாக்கள் இல்லை,
பிஞ்சு குரலில் கொஞ்சி பேசும் கிளிக்கூட்டம் இங்கில்லை,
சின்னப்பழம் கொறிக்கும் சிட்டுக்குருவிகளும் இல்லை,
மழையில் மகிழ்ந்ததுமில்லை,வெயிலில் காய்ந்ததுமில்லை,
இளைப்பாற இங்கே எவருமில்லை,
கருப்பையில் கனிகளை சுமந்ததுமில்லை,
காற்றை எப்போதும் பிரசவித்ததுமில்லை,
இருந்தும்,எங்கள் விழி ஓரங்களில் ஈரமில்லை.
உங்கள் கலைக்காய், எங்கள் காலம் கழிந்து கொண்டிருக்கிறது.
"போன்சாய்" என்னும் பெயரோடு!

தண்டனையில்லை இக்குற்றத்திற்கு!



என் கவிகூடினை உடைத்தது யார்?

தேடல் வேட்டை தொடங்கியது.

காற்றை போல ஏனோஉடைத்தவன் சுவடு கூட தெரியவில்லை.

போகட்டும்.

கூட்டிலிருந்து அழகு தரும்பட்டு புழுக்கள் வெளிப்படலாம்.

ஆனந்தம் தரும் வண்ணத்து பூச்சிகளும் வெளிப்படலாம்.

ஒருவேளை,

உங்களை முகம் சுளிக்க வைக்கும் மண்புழுக்களும் வெளிப்படலாம்.

ஆனால்.........இவை யாவும் உன்னுள் என்னுள் ஊர்ந்து கிடக்கும்

உயிர் கொண்ட ஜீவன்களே!

Thursday, September 17, 2009

நாய் விற்ற காசு குறைக்கும்!


அடித்து (காக்காய்) பிடித்து
ஓர் அரசாங்க வேலை
கிடைத்தது.

முதல் முதலாய் வாங்கிய
கிம்பளம்
ரூபாய் ஐந்தாயிரம்!

கடவுளிடம் ஓர்
கணக்கு துவங்கினேன்.
வாங்கும் கிம்பளத்தில்
அவருக்கும் ஒரு
கிம்பளம் தருவதாக!

கார், பங்களா,
தங்கம், வைரம்,
பையனுக்கு டாக்டர் படிப்பு,
என் மூளை வளரும்
கிம்பளங்களை எண்ணிக்கொண்டிருந்தது.

கனவுகளை கலைத்த
தொலைபேசி அலறல்.
வேண்டா வெறுப்புடன்
ஓலி வாங்கியை கைவாங்கினேன்.

என் மகன்தான் பேசினான்.
அப்பா,
அம்மா மாடிப்படி தவறி
விழுந்து விட்டாள்!
சர்ஜரி செய்ய வேண்டுமாம்.
5000 ரூபாய் வேண்டுமாம்!

சிரிக்கும் பாரதி!

எங்கேயாவது சில தருணங்களில்
தவறுதலாய்
எனைக்கண்டால்கூட
கோபக்கனல் ஒன்று மூட்டி,
தன் நடையின்
வேகத்தைக்கூட்டி,
கண் முன்னே
காணாமல் போகும் அப்பா!
அவர் சொன்ன
ஜாதிக்கு மாலையிட மறுத்து
ஓர் மனிதனை
மணந்ததன் விளைவு,
மேற்சொன்ன நிகழ்வு!
ஆனால்..............
அவர் இன்னும்
உரத்த குரலில்
இசையோடு இனிமையாய்,
பள்ளிகளில்
பாரதி படத்தின் கீழே
பாடி கற்றுக்கொடுக்கிறார்,
"ஜாதிகள் இல்லையடி பாப்பாவென்று"!

சூரியன்!



தூங்கி எழுந்து,
கொஞ்சமாய்
சோம்பல் முறித்து,
கதிர்கலெனும் ஆடை உடுத்தி,
கடல் கண்ணாடியில்,
முகம் பார்த்து,
திருப்தி அடைந்து,
பின்னே
மெல்ல புறப்பட்டு,
தன் சுட்டெரிக்கும்
நெருப்பால்,
பூமிக்கு சுடர்விளக்காகி,
மயங்கும் மாலையில்,
கடலின் மடி சாய்ந்து,
கன்னம் சிவக்கையில்,
ஆண்களுக்கும்,
வெட்கம் வருமென்பதை
அவனிடமே கண்டேன்!

பெண் தெய்வம் நின்று கொல்லும்!


மணமாகி
மறு வீடு போன
எம்மவளே!
உன்னை
பொணமா பாக்கத்தானா
பொண்ணப் பெத்தெடுத்தேன்!

கல்யாணத்துக்கு
கட்டி வச்ச
வாழ மட்ட காயலியே!
புதுசா பூத்த
என் பூங்கொத்து
கருகிடுச்சே!

வயித்துக்கு சோறு
போட்ட கால் காணி
பூமி கூட
உன் கல்யாண
செலவாத்தான் கரைஞ்சிடிச்சி!

ஏழெட்டு பவுனுக்கே
என் காசு இரையாச்சு!

பாக்கி பவுனுக்கும்
பசுமாட்டை எழுதிவேச்சேன்!

கல்யாணம் முடிஞ்சு
கற்பகமா வருவேன்னு
காத்திருந்தேன்!
இப்படி கரிக்கட்டையா
வருவேன்னு
கனவுயிலும் நினைக்கலடி!

சவரன் போதலைன்னு
சத்தமில்லாம கொன்னுபுட்டான்!

போலீசு கூட
அவன் காசுக்குத்தான்
நாயாச்சு!

பெத்த வயிறு
நெருப்பில்லாம எரியுதடி!

நாலு பல போயி
மாசம் ரெண்டாச்சு!
மெதுவாத்தான்
எட்டுச்சி எங்காத்துக்கு
அந்த சேதி!

வாழைத்தோட்டம் வந்தவன்
கருநாகம் தீண்டி
கண்ணா மூடிட்டானாம்!

ஓடோடி வந்தேண்டி
எம் பொண்ணே
உன்னை பாக்க!

கண்ணார
என்னை பாத்து
சிரிச்சபோது
என் மாவளாயில்லை.
கருமாரியாத்தான்
நீ தெரிஞ்ச!

மழைக்கால அகதிகள்!




இது கதவில்லா வீடு!
களவாட யாரும்
வருவதில்லை!

வீடென்றால்...........
கம்பி வைத்து கட்டியதல்ல.
கிடைக்கும் காகிதங்களில் ஒட்டியது!

மனைவியோடான
முத்தங்களும் இங்குதான்!
மூன்று மகள்களின்
பருவ முதிர்சிகளும் இங்கேதான்!

நாங்களும்
ஓர் வகையில்,
ஜப்பானியர்கள் தாம்!

எரிகுழம்பு அவர்களை கலக்கும்!
மழைகுழம்பு எங்களை கிளப்பும்!

எங்களுக்கு
ரோடு ஆறுமாதம்!
மீதி..........?
பீதியே!

நீங்கள் நடந்து செல்ல,
முகம் சுளிக்கும்
பாதைகளில்தான்
எங்கள் பச்சிளம் குழந்தைகள்
படுத்துறங்குகின்றன!

நாங்கள்
கண்ணீரும் விடுவதில்லை!
அது கடலென பெருகி,
எங்கள் காகிதங்கள்
கப்பலாகி விடுமோ (?) என்பதால்!

கரை வேட்டி கட்டி,
கரம் குவித்து,
எங்கள் வீடு(?) தேடி,
கவிதை பாடி சென்றனர்.
"போடுங்கள் ஓட்டு!
கட்டி தருவோம் ஓர் வீடு"

ஓட்டோடு
ஓடிபோனவர்கள்தான்,
அவர்கள் வீதிவழியே
விரையும் போது
காரின் பார்வை
தவறுதலாய் கூட,
எங்கள் மீது விழவே இல்லை!

மழைக்கால
அகதிகள் நாங்கள்!
மன்றாட யாருமில்லை!


வீதி வாழ்கின்ற
நாட்டின் விதிகள் நாங்கள்!
திருத்தி எழுத எவருமில்லை!


தின கூலியாய்,
வரும் அறுபதில்,
அரை வயிற்று
சோற்றுக்கு கொஞ்சம்!
அடிக்கடி வரும்
அரசதிகாரிக்கு லஞ்சம்!
பிறகெப்படி
வீடென்ற கனவு
எங்கள் இமைகளில் கொஞ்சும்?

கர்மத்தை எண்ணி,
காரியம் நோக்கி செல்கின்றோம்!

கடந்து சென்ற கட்டிடங்களில்,
ஏசியின் சுவசிப்பில்,
ஓய்வெடுக்கும்
செல்லபிராணிகள் இரக்கமாய்
எங்களை நோக்குகையில்,
இதயத்திலிருந்து ஓர்
அழுகைக்கான வெடிப்பு
ஆயத்தமாகிறது
யாருக்கும் சொல்லாமல்!

பூமியும் ஓர் புதிரே!

என் மூதாதையருக்கு
வட்டமாய்,
கலீலியோவின் கண்டுபிடிப்பில்
தட்டையாய்,
பேருந்து ஜன்னல்களில்
சதுரமாய்,
தங்கையின்
ஜாமேன்றி பெட்டி மூலைவிட்டத்தில்
முக்கோணமாய்.....

உழுதுழைக்கும் உழவனுக்கு
பச்சையாய்,
கவிஞனுக்கு
உவமை பொருளாய்,
குயவனுக்கு
சுட்ட மண்ணாய்,
வெற்று கண்களுக்கு
வெட்ட வெளியாய்,
தீவிரவாதிகளுக்கு
சிவப்பு ரத்தமாய்.....

எது
என் பூமி?

இது
பார்வையின் பரிகாசமா?
பார்பவரின் மதி விலாசமா?

புதிர்களுக்குள் என்னை
பயணிக்க செய்து விட்டு
தானும்
சுற்றி கொண்டிருக்கிறது
குழப்பத்தில்
தலை நிறுத்தாமல்!

வீணையடி நீ எனக்கு!



காத்திருந்த காதுகளில்,
கனிவாய் அந்த செய்தி
விழுந்த போது,
மீண்டும் ஒருமுறை
நான் பிறப்பெடுத்தேன்!

காண்போர் யாவரும்
என்னிடம் உன்னைப்பற்றி
என் கன்னம் தடவி
கேட்கையில்
அடிக்கடி வெட்கப்பட்டேன்!

என்னையே
தொலைத்து நிற்கும்
உனக்கான நினைவுகள்
இப்போது கனவிலும்!

உணவு, உறக்கம்,
நடை, உடை
யாவற்றிலும்
சில பல திருத்தல்கள்
உன் பொருட்டு என்னில்!

நீ கருப்போ? சிவப்போ?
உனக்கான உருவம்
எனக்கான பிரம்மாவால்
என்னுள் எழுதப்படுகிறது!

வானத்தில் மேகம்
எழுதும் ஓவியங்களாய்,
நீ என்னுள்
கால்களுதைத்து எழுதும்
கவிதைகள்
என்னை சிலிர்க்க வைக்கின்றன!

உன் உச்சி நுகரும்
நாளுக்காய்
காலம் காத்திருக்க
சொல்லும் அவகாசம்
மிக அநியாயம்!

ஆனால்..........
இம்முறை
என் காதுகளோடு
தாய்மையும் காத்திருக்கிறது!
உன் நா நரம்புகள்
மீட்டப்போகும்
"அம்மா" வார்த்தைக்காக!

Wednesday, September 16, 2009

என் செய்வேன் நான்?



வாரத்தின்
ஓர் "வெள்ளி" தினத்தில்,
அரைத்த மஞ்சளை அழகுற பூசி,
விரித்த சூரியனாய் முகம் மலர்ந்து,

கருவிழிகளின் புறச்சுவர்களுக்கு
கருப்பு சுண்ணம்
கொண்டு வண்ணம் அடித்து,

கரு மூங்கிலென வளர்ந்து செழித்த
கூந்தல் காட்டுக்குள்ளே,
ஒரு காலில் தவம் ரிஷிபூக்களுக்கும்
கொஞ்சம் தஞ்சமளித்து,

கவிதை பேசி காதல் செய்து
முத்தமிட்டு கொள்ளும்
கண்ணாடி வளையல்களின்
சப்தத்தோடு,

ஒரு மஞ்சள் கயிறு கொண்டு
சிறு தூளி கட்டி
மார்போடு ஆடவிட்ட
தாலிக்குழந்தைக்கு
செஞ்சாந்து பொட்டிட்டு,

கூடவே,
இருமலைஎன உயர்ந்து
பின் மடிந்து நிற்கும்
பிறை வடிட்டு நெற்றி நிலவிற்கும்
ஓர் திலகம் சேர்த்து வைத்து,

காற்று தொட்டு கருத்து போவதாய்,
கவலை கொள்ளும் வெள்ளி மெட்டிகளின்
மௌன விசும்பல்களோடு
அன்னமென நடையிட்டு வரும்
கங்கைஒத்த புனித
நங்கைகளை கண்ணுறும் போது
கல்யாண சிறகுகள்
கண்களில் முளைக்கும்!

எண்ண அலைகள் காதல் மண்ணை
தொட்டு தொட்டு நனைக்கும்!

காணும் முகங்களில் எல்லாம்
கண்ணாளன் முகம் தேடி
கண்கள் களைப்புற்று பின் இளைப்பாறும்!

மயிலிறகை கொண்டு மனதை யாரோ
மெல்ல வருடுகையில் தோன்றும்
சிலிர்ப்பை சுவாசிக்கையில்.....

எண்ண அடுக்குகளில்....
எப்போதோ தொலைந்து போன,
மறந்து போன.....
சத்தியம் ஒன்று
மெல்ல எட்டி பார்க்கிறது!

"இந்தியா என் நாடு,
இந்தியர் அனைவரும்
எனது சகோதர, சகோதரியர்"
என்று என் பள்ளி பிராத்தனையில்
நெஞ்சின் மீது கைவைதெழுதிய
உறுதி இன்று என்
கனவுகளையும் சேர்த்து புரட்டுகையில்,
என் செய்வேன் நான்?

உறுதிமொழியை உறுதியாய்
பற்றிக்கொண்டு இறுதி வரை வாழ்வதா?
இல்லை இதை மறந்து சுகித்திருக்கும்
மாந்தருக்குள் நானும் மருவிப்போவதா?

பழக்கத்தையும் பாரம்பரியத்தையும்
பெரிதாய் பறைசாற்றும்
என் நாட்டின் பண்பாடு
உடைபட்ட கண்ணாடி
சில்லுகளில் சிதறி நாடெங்கும்
எதுரொலித்து இருப்பதை
எங்ஙனம் உரைக்க?

உறுதிமொழி எழுதிய கைகளை தண்டிப்பதா?
அதை விளையாட்டென எண்ணி
மனம் புரிந்த எம் இந்திய
மக்களை மன்னிப்பதா?

கார்மேகத்தின் கருவில் ஜனித்து
கடலின் வாய் காத்திருக்கும்
சிப்பிக்குள் சூல் கொண்டு
கடவுள் கைசேரும்
நல முத்தாய்வாழ்வேனோ?
இல்லை நானும்
வெறும் மழையென கலந்து
அது ஒதுக்கும் கரைகளில் புரண்டு
கல் உப்பாய் போவேனோ?


என் செய்வேன் நான்?

சூரியன் மரிப்பதில்லை!



இலங்கையில்
தனி தமிழ் ஈழத்திற்காய்
கொலை வாளினை
எடுத்தவனுக்கு யாரடா
கோடித்துணி போர்த்துவது?

இரும்புகள் அழிக்கப்படலாம்.
இமாலயங்கள் அழிவத்தில்லை!


கடலின் மடி சாய்ந்த
சூரியனை கண்டு
மரித்து விட்டான் என்று ஆர்பரிக்காதே!


சூரியன் மரிப்பதுமில்லை!
தன் கதிர்களால்
பூமிக்கு ஒளியூட்ட மறப்பதுமில்லை!

இலங்கையனே!
இரக்கமற்ற அரக்கனே!
உன்னை போல்
கூலிக்கு வேலை செய்யும்
கூட்டம் அல்ல!
இறப்பு ஏற்படினும்
இலக்கு நோக்கும்
பீனிக்ஸ் பறவைகள் நாங்கள்!

நெருப்பிற்கு யாரடா
எரிக்க கற்று கொடுப்பது?

எங்கள் தலைவன்
எழுந்து வருவது உறுதி!

எண்ணிக்கொண்டிறு உன்
வாழ்நாளை!
எழுதிகொடுக்க ஆயத்தமாயிரு
எங்களுக்கான தனி ஈழத்தை!

காகித பூக்கள்


காகித பூக்கள்
அண்ணன்களின்
சில அப்பாக்களின்
அவசர தேவைக்காய்,
அடமான பொருளாய் நாங்கள்!

ஐந்தரையடி உடலுக்கு
ஐயாயிரமே அதிகமாம்!


யாரும் மீட்கபோவதுமில்லை!
மீள்கின்ற வழியுமில்லை!


கண்ணாடி பதித்த ரவிக்கையை

அணிகின்ற போதும்
அது எங்கள்
கஷ்டங்களை காட்டுவதில்லை!


நரம்புகள் அறுந்த பின்னும்,
லயம் மாறா
இசை மீட்டும்
விறகான வீணைகள்!


பிரம்மனால்
பிழைகளுடன் எழுதப்பட்ட
கவிதைகள் நாங்கள்!


கற்று கொடுக்கும்
ஆசானுக்கே திரும்புகிறது
பிரம்பின் வலி!


எச்சில் உணவுதான்!
தினமும் புதிதாகவே
பூஜிக்கப்படுகின்றோம்!


இருட்டு பொழுதில்
திருட்டு கண்களோடு தேடும்
கண்ணியவான்களின் கைகளில்
ஒளிரும் சிவப்பு விளக்குகள்!


வடுக்கள் பல தந்த போதும்,
வரி கட்ட வேண்டா
வருமானம் இங்குண்டு!


அடுத்த வேலை (ளை) காய்,
சாலைகளின் ஓரங்களில்,
சாய்ந்து நிற்கையில்,
பசி கொண்ட கண்களோடு,
ஏக்கத்தோடு கை நீட்டும்
அறைஜான் குழந்தையிடம்,
10 ரூபாய் திணிக்கையில்


வெளிப்படும் ஆனந்த புன்னகையில்,
அவ்வப்போது மனம் வீசிக்கொள்கின்றன,
இந்த "காகித பூக்கள்"